Monday, April 18, 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.


"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

Thursday, April 14, 2011

காணாமல் போன " ஈயம் பித்தளை பேரீச்சைப்பழம் '

பழைய ஈயம், பித்தளைகளுக்கு பேரீச்சைபழம் தரும் வியாபாரம் காலத்தின் கோலத்தால் காணாமல் போய்விட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்கள், பயனற்று போன நிலையிலும் பத்திரப்படுத்தப்படும். காலி சைக்கிளுடன் வரும் வியாபாரி, அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக பேரீச்சம் பழம் உள்ளிட்ட உண்ணும் பொருட்களை கொடுப்பார். அடுத்த 30 நிமிடத்தில் தள்ளமுடியாத அளவுக்கு ஈயம், பித்தளை சாமான்களை சைக்கிளில் ஏற்றிச்செல்வார். குழந்தைகளுக்கு ஜவ் மிட்டாய், சீனி மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன. இதற்காக அக்கம் பக்கத்தில் வசிப்போரின் பொருட்களை கூட குழந்தைகள் பதுக்கி வைத்து மிட்டாய் வாங்குவதும், பின்னர் விபரம் தெரிந்து அடிவாங்குவதும் தொடர்ந்தது. கால மாற்றத்தில் ஈயம், பித்தளை பயன்பாடு கணிசமாக குறைந்தது. ஆர்வமாய் இருந்த திண்பண்டங்கள், நாகரீக வளர்ச்சியில் முக சுழிப்பை ஏற்படுத்தின. இதனால் ஈயம், பித்தளை தேடி வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர் .
பிளாஸ்டிக் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமானதால், வியாபாரிகளும் அதை சேகரிப்பதில் நாட்டம் காட்டினர். இம்முறை பண்டம் தருவதற்கு பதிலாக பணம் பெறப்பட்டது. இதனால், தமிழகத்தில் இருந்த ஒரே பண்டமாற்று முறையும் முடிவுக்கு வந்தது. இப்போதெல்லாம், "பழைய ஈயம், பித்தளைக்கு பேரீச்சை பழம்,' என்ற, வார்த்தையை கேட்க முடிவதில்லை.

Friday, April 8, 2011

வீ.கே.புதூர் பகுதியில் ராதிகாசெல்வி பிரசாரம்


வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி பிரசாரம் செய்தார்.தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராக கருப்பசாமிபாண்டியன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுகள் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி பிரசாரம் செய்தார். தொகுதியில் அடங்கிய இ.மீனாட்சிபுரம், ராஜகோபாலபேரி, அதிசயபுரம், நாச்சியார்புரம், சோலைசேரி, கருவந்தா, லெட்சுமிபுரம், அச்சங்குன்றம், பரங்குன்றாபுரம், வாடியூர், கீழக்கலங்கல், மேலக்கலங்கல், ஊத்துமலை, மருக்காலன்குளம் பகுதிகளில் ஓட்டுகள் சேகரித்தார்.

பிரசாரத்தின்போது தமிழ்நாடு காங்., பொது செயலாளர் சார்லஸ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேசுராஜன், தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் முத்தையா, கிளை செயலாளர்கள் வீராணம் பாலமுருகன், இருதாலய மருதப்பபாண்டியன், அதிசயபுரம் சைமன், ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் லக்குமணன், பழனி, முத்துராமன், வெள்ளத்துரை, மாவட்ட பிரதிநிதி மரியராஜ், முருகராஜ், சுப்பையாபாண்டியன் உட்பட கூட்டணி தொண்டர்கள் உடன் சென்றனர்.

வீ.கே.புதூர் பகுதியில் இந்திய கம்யூ.,ஆர்ப்பாட்டம்


வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் பகுதியில் விளைநிலங்களில் காற்றாடி ஆலை நிறுவுவதை கண்டித்து இந்திய கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வீ.கே.புதூரை சுற்றியுள்ள வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலப்பேரி, கருவந்தா, லெட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், அச்சங்குன்றம், கலிங்கப்பட்டி, ராமனூர், ராஜபாண்டி, கழுநீர்குளம், முத்துகிருஷ்ணபேரி, துத்திகுளம் போன்ற பகுதிகளில் காற்றாடி மின் ஆலைகள் நிறுவப்பட்டு செயல்படுகின்றன.

தொடர்ந்து மின் ஆலைகளை நிறுவ பல்வேறு நிறுவனங்கள் படையெடுத்து வருவதால் இப்பகுதியில் நிலங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.இதனால் குளங்களுக்கு மிக அருகிலும், பாசன பரப்புகளில் உள்ள நன்செய் நிலங்களும் கூட காற்றாடி ஆலைக்காக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வெகுவிரைவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விளைநில பகுதியில் காற்றாடி ஆலைகள் நிறுவுவதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் வீ.கே.புதூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., ராமசாமி தலைமை வகித்தார். சிவகாமி தொகுதி முன்னாள் எம்.பி.,அழகர்சாமி, நெல்லை மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டகுழு உறுப்பினர் அருணாசலம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.தென்காசி தாலுகா செயலாளர் போஸ், துணை செயலாளர் கணேசன், குழு உறுப்பினர் மாடசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, சிவகிரி தாலுகா செயலாளர் வேல்சாமி, செங்கோட்டை தாலுகா செயலாளர் அரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வீ.கே.புதூர் தாலுகா துணை செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.